Monday, May 21, 2012

வாழ்க்கையின் பாதையிலே - N. Ganeshan

வாழ்க்கையின் பாதையிலே
வெகுதூரம் செல்கையிலே
கல்லிருக்கும் முள்ளிருக்கும்
கள்ளிச்செடி உள்ளிருக்கும்
பாதையை நீ பழிக்காமல்
பார்த்து நட மானிடனே!

பாராட்டு சில நேரம்
வசைபாட்டு சில நேரம்
பாராமுகமாகவே
ஊரிருக்கும் பல நேரம்
மனமுடைந்து முடங்காமல்
தினம் செல்வாய் மானிடனே!

சில சமயம் துணையிருக்கும்
சில சமயம் பகையிருக்கும்
பல சமயம் தனித்தே நீ
பயணிக்கும் நிலையிருக்கும்
இறை இருப்பான் துணையென்று
முறை நடப்பாய் மானிடனே! - N. Ganeshan