Sunday, June 26, 2011

நிம்மதி சூழ்க! - Vairamuthu

நிம்மதி சூழ்க!

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!


ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

Tuesday, June 7, 2011

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே - வைரமுத்து !

~


கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்னை கல்லுடைச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் உழைச்ச தாயே
என்னை முள்ளு தைக்க விடல நீயே
காடைக்கும் காட்டு குருவிக்கும் எண்டை புதருக்குள் இடமுண்டு
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும் தாய் ஒதுங்கதான் இடமுண்டா?
கரட்டு மேட்டையே மாத்தினா அவ கல்லை புழிஞ்சு கஞ்சி ஊத்துனா..

உழவு காட்டில விதை விதைப்பா
ஓணான் கரட்டில கூழ் குடிப்பா
ஆவாரம் குழையில கை துடைப்பா -பாவம்மப்பா
வேலி முள்ளில் அவ விறகெடுப்பா
நாழி அரிசி வைச்சு உலைய வைப்பா
பிள்ளை உண்ட மிச்சம் உண்டு உயிர் வளர்ப்பா தியாகம்மப்பா
கிழக்கு விடியுமுன்னே விழிக்கிறா அவ உலக்கை பிடித்துதான் பிறக்கிறா
மண்ணை கிண்டிதான் பிழைக்கிறா உடல் மக்கி போகமட்டும் உழைக்கிறா..

தாயி கையில் என்ன மந்திரமோ
கேப்பை களியில் கூட நெய் ஒழுகும்
காஞ்ச கருவாடு தேனொழுகும் அவ சமைக்கியிலே

தங்கம் தனிதங்கம் மாசு இல்லை
தாய்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்லை
தாய்வழி சொந்தம் போல பாசம் இல்லை நேசமில்லை..
ஆறு இல்லா ஊரில் கிணறு இருக்கு
கோயில்லா ஊரில் தாய் இருக்கு
தாயில்லா ஊரில் நிழல் இருக்கா அன்பில் நிசமிருக்கா

சொந்தம் நூறு சொந்தம் இருக்குதே
பெத்த தாய் போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குதே அட
தாய் இரண்டு தாய் இருக்குதா

தலைவருக்கு 6 வது தேசிய விருது பெற்று கொடுத்த பாடல்.பாட்டை முதலில் கேட்ட அன்று தூக்கமே வரல..எங்கும் திரும்பினாலும் என் அம்மா....


~